கூடங்குளத்தில் ஆகஸ்டில் மின் உற்பத்தி துவக்கம்: என்பிசிஐஎல் அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அணுமின் உற்பத்தி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்திய அணுசக்தி கருத்தரங்கு நேற்று டெல்லியில் துவங்கியது. அதில் கலந்து கொண்ட என்பிசிஐஎல் உயரதிகாரி ஒருவர் கூடங்குளம் விவகாரம் பற்றி கூறியதாவது,
இன்னும் 4 முதல் 6 வாரங்களில் கூடங்குளத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் மாறி அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு அங்குள்ள அணுவிஞ்ஞானிகள் தங்கள் பணியைத் துவங்குவர். அவர்கள் தங்கள் பணியை முடிக்க குறைந்தது 4 மாதங்கள் ஆகும். எனவே வரும் ஆகஸ்ட் மாதத்தில் அணுமின் உற்பத்தியை துவங்கிவிடலாம் என்று நம்புகிறோம். கூடங்குளம் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இதற்கிடையே இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் அப்பகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அந்த நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் மக்களுக்கு விளக்கி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications