கூட்டாக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிப்போம்: மாநிலங்களுக்கு ப.சி. கடிதம்
டெல்லி: தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு உள்பட 10 மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், தீவிரவாதத்தை கூட்டாக செயல்பட்டு ஒழிக்க வேண்டியது நமது பொறுப்பு'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம்
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் என்ற அமைப்பை மார்ச் 1-ந் தேதி தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமலும் மாநில உரிமைகளைப் பறித்தும் தேசிய தீவிரவாத மையம் உருவாக்கப்படுவதற்கு தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மாநில அரசுகளுடன் ஆலோசிக்குமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.
ப.சி. கடிதம்
இதைத் தொடர்ந்து 10 மாநில முதலமைச்சர்களுக்கு ப.சிதம்பரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினை பற்றிய முதலமைச்சர்களின் கருத்தை வரவேற்கிறோம்.
முதல் கட்டமாக மாநில காவல்துறை தலைவர்களின் கூட்டத்தை டெல்லியில், மத்திய உள்துறை செயலாளர் கூட்டி இருக்கிறார். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் அதிகார வரம்பு, செயல்பாடு, வரைமுறை ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.
இந்திய தேசத்துக்கே தீவிரவாதம் பெரும் மிரட்டலாக அமைந்து இருக்கிறது. நாம் அனைவரும் கூட்டாக செயல்பட்டு, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும்.
இது நமது பொறுப்பு. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதின் நோக்கம், அதன் செயல்பாடு, அதிகார வரம்பு போன்ற விவரங்களையும் இத்துடன் இணைத்து இருக்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.
ப.சி. கருத்து
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதன் மூலம், தீவிரவாதிகளை தேடிச்செல்லும் அதிகாரி ஒருவர், அவர் சந்தேகப்படும் ஒருவரை, அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உடனடியாக அவரை கைது செய்ய முடியும்.
இது தீவிரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கை என்று மத்திய அரசு கருதுகிறது.
இதுபோன்று கைதானவர், மாநில அரசின் பொறுப்பில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார். அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் ப.சிதம்பரம்.