3 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து - கூடங்குளம் எஃபெக்ட்!!
கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் போராட்டக் குழுவினருக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நிதி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் சர்வதேச அறிவியல் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி டெல்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், "கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து நிதி கிடைக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இதனால் அமெரிக்க அரசுதான் போராட்டக் குழுவினருக்கு நிதி அளிப்பதாகக் கருதக் கூடாது. அமெரிக்காவில் உள்ள சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நல்ல நோக்கத்துக்காக இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்கின்றன. உடல் ஊனமுற்றோர், தொழுநோய் போன்ற பிணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களுக்காக நிதி உதவி செய்யப்படுகிறது.
அத்தகைய நிதி, கூடங்குளம் பகுதியில் உள்ள சில அமைப்புகளுக்கும் வருகிறது. அதை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் சில தொண்டு நிறுவனங்கள், தேச விரோத செயல்களுக்குப் பயன்படுத்துகின்றன.
உதாரணமாக, அமெரிக்க நிதியைக் கொண்டு கூடங்குளம் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த மக்களைத் திரட்டுவது, லாரிகளை வாடகைக்கு எடுத்து மக்களை அழைத்து வருவது, கூட்டங்கள் நடத்துவது, போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுப்பது, உணவு வழங்குவது போன்றவற்றுக்காக வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.
இது போன்ற புகார்களுக்கு உள்ளான 12 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாகக் கண்காணித்தது. அதில் மூன்று நிறுவனங்களின் செயல்பாடு அரசுக்கு எதிராக இருப்பது உறுதியானதால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்று நாராயணசாமி தெரிவித்தார்.