கூடங்குளம் கடற்பகுதியில் ஆய்வுக்குழு தலைவர் மீது தாக்குதல் - 57 பேர் மீது வழக்கு பதிவு
கூடங்குளம்: கூடங்குளம் அருகே உள்ள கடற்பகுதியில் ஆய்வுக்குழு தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உதயக்குமார், புஷ்பராயன் உட்பட 57 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கூடங்குளம் அருகே கூத்தங்குழி கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் நின்று கொண்டிருந்த 4 பேர் மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 4 பேரும் இந்தி மற்றும் தெலுங்கில் பேசி கொண்டிருந்தனர். இதனையடுத்து 4 பேரையும் அப்பகுதி மக்கள் அருகே உள்ள பாதிரியார் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இடிந்தகரையில் ஆய்வு மேற்கொண்ட ஒருவரும் பிடிபட்டார். அணுமின்நிலைய எதிர்ப்புக்குழு உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் 5 பேரிடமும் விசாரித்தனர். அவர்கள் வந்த வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடன்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட 5 பேரும் இந்திய கடற்பகுதியில் சுனாமி, கடல் அரிப்பு உள்ளிட்ட ஆபத்தான சூழல்கள் குறித்து ஆய்வு கொண்டு வரும் ஐதராபாத் தனியார் நிறுவன களப்பணியாளர்கள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராதாபுரம் தாசில்தார் சுப்பிரமணியன், கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 5 பேரையும் விடுவி்த்தனர். இந்நிலையில் தான் தாக்கப்பட்டதாக கூறி கடற்பகுதி ஆய்வுக்குழு தலைவர் ரசூல் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
மேலும் இது குறித்து ரசூல், கூடன்குளம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் சட்ட விரோதமாக கூடுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உதயக்குமார், புஷ்பராயன் உட்பட 57 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.