ஆப்கனில் புனித குரான் எரிப்பு: நாடு முழுவதும் கலவரம் - 27 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ஆதரவு நேட்டோ படையினர் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் புத்தகங்களை எரித்ததை அடுத்து அங்கு நாடுமுழுவதும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டக் காரர்களுக்கும், நேட்டோ படையினருக்கும் நடைபெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போரினை அறிவித்த அமெரிக்கா தனது ஆதரவு படையினரை ஆப்கானிஸ்தானில் குவித்துள்ளது. இந்த படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்தது தெரியவந்தது.
இதனால் ஆப்கான் நாடுமுழுவதும் வன்முறை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. நாடுமுழுவதும் நான்கு நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகரம் காபூல் மற்றும் நாடு முழுவதும் தற்போது கலவரம் பரவி உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் மட்டும் 12 பேர் பலியானார்கள். தொடர்ந்து நிலைமை மோசமாக உள்ளது. சனிக்கிழமையன்று வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டிடத்தின் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
குரான் எரிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்ட பின்னரும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.
குரான் எரிப்பு சம்பவத்தினால் ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் மற்றும் மலேசியா நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.