இன்று முதல் டேங்கர் லாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்: கடும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும்
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் இவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டு, இன்னும் நிலைமை சரியாகாத சூழ்நிலையில், மீண்டும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகப் போகின்றனர்.
தென்மண்டல எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய பொன்னம்பலம்,
எண்ணெய் நிறுவனங்களுடனான உடன்பாட்டை புதுப்பிக்காதது, புதிதாக வாங்கப்பட்டுள்ள டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் ஏற்றிச் செல்ல அனுமதி தர வேண்டும், வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமீபத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டோம்.
பிப்ரவரி 15ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழி தரப்பட்டதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால், மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
இந்த வேலை நிறுத்தத்தில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 3,500 டேங்கர் லாரிகள் பங்கேற்கின்றன. இதனால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடும் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.