சங்கரன்கோவிலில் தெடரும் தேர்தல் ஆணைய சோதனை: ரூ17 லட்சம் சிக்கியது
சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகனச் சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் சிக்கியது.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் ரோந்து பணியிலும், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 25-ந் தேதி ரூ.10 லட்சத்தையும்,
தேவர்குளம் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. குருவிகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 26-ந் தேதி ரூ.5 லட்சமும், சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 ஆயிரத்து 700 ரொக்கமும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 5 மிக்சிகள், 7 குக்கர்கள், 4 மின்சார அடுப்புகள், 3 டின்னர் செட்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பான வழக்குகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரொக்கம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் மீது, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.