பாட்னா வங்கியில் ரூ.17.96 லட்சம் கொள்ளை: கொள்ளையர்கள் எஸ்கேப்
பாட்னா: சென்னையைப் போன்று பாட்னாவில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ரூ.17.96 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னையில் 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கனரா வங்கி ஒன்றில் 6 கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள பிக்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரேவ் என்ற இடத்தில் கனரா வங்கியின் கிளை செயல்படுகின்றது. இங்கு நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் 4 மோட்டார் சைக்கிள்களில் 6 கொள்ளையர்கள் வந்தனர்.
இதில் வங்கியின் வெளியே நின்ற ஒருவர் மட்டும் முகமூடி அணிந்து கொள்ள மற்ற 5 பேரும் வங்கியின் உள்ளே வாடிக்கையாளர்களை போல நுழைந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து வங்கி மேலாளர் ஆர்.கே.செளத்ரி உள்ளிட்ட பணியாளர்களை ஒரு அறையிலும், அங்கிருந்த வாடிக்கையாளர்களை இன்னொரு அறையிலும் அடைத்தனர்.
அதன் பிறகு காசாளரை மிரட்டி வங்கியில் இருந்து ரூ.17.96 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அடைக்கப்பட்ட அறைகளை கொள்ளையர்கள் வெளியே தாளிடவில்லை. இதனால் சிறிது நேரத்தில் அறைகளில் இருந்து வெளியே வந்த வங்கி அதிகாரிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எஸ்.பி.மனோஜ் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் பணம் கேட்டு காசாளரையும், மேலாளரையும் மிரட்டியதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.