முல்லைப் பெரியாறு ஓடும் பிரவம் தொகுதி இடைத் தேர்தலில் காங். வேட்பாளர் வெற்றி
டெல்லி: கேரளாவில் முல்லைப் பெரியாறு ஆறு ஓடும் பிரவம் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அனூப் ஜேக்கப் வெற்றி பெற்றார். கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.
சமீபத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை படு வேகமாக பெரிதாக்கின கேரள அரசியல் கட்சிகள். புதிய அணை கட்டப் போகிறோம், இடிக்கப் போகிறோம், அணை இடிந்தால் பல லட்சம் மக்கள் செத்துப் போவார்கள், ஊரெல்லாம் பிணமாக மிதக்கும் என்றெல்லாம் சிடி போட்டு, படம் எடுத்து மக்களை பீதியூட்டினார்கள். கேரளாவுக்குச் சென்ற தமிழர்கள் தாக்கப்பட்டனர். கடைகள் சூறையாடப்பட்டன.
இதனால் இரு மாநில மக்களுக்கிடையே பெரும் கசப்புணர்வு ஏற்பட்டது. கேரளாவுக்குப் பதிலடி தரும் வகையில் வரலாறு காணாத வகையில் தமிழகத்திலும் தாக்குதல்கள் வெடித்தன. தேனி மாவட்டம் கொந்தளித்தது, லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தால் கேரளா அதிர்ந்தது.
இத்தனை அமளிகளுக்கும் காரணம், கேரள மாநிலம் பிரவம் தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தல்தான். அந்த தொகுதி வழியாகத்தான் முல்லைப் பெரியாறு ஓடுகிறது. எனவேதான் தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக் கொண்டு இந்த பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்படிப்பட் பிரவம் தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சியின் அனூப் ஜேக்கப் வென்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட் கம்யூனிஸ்ட் கூட்டணி வேட்பாளர் எம்.ஜே. ஜேக்கப்பை விட அவர் 12,071 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளருக்கு 82756 வாக்குகள் கிடைத்தன. கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு 70685 வாக்குகள் கிடைத்தன.
இந்தத் தொகுதியின் உறுப்பினராக அனூப் ஜேக்கப்பின் தந்தை டி.எம்.ஜேக்கப் இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது. கடந்த தேர்தலில் அனூப்பின் தந்தை வெறும் 157 வாக்குகள் வித்தியாசத்தி்ல்தான் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தற்போது காங்கிரஸ் கூடுதல் பலனைச் சந்தித்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் தற்போது காங்கிரஸ் கூட்டணியின் பலம் 71 ஆக உயர்ந்துள்ளது. கம்யூனிஸ்ட் கூட்டணியின் பலம் 67 ஆக உள்ளது. முதலில் 68 பேர் அக்கட்சிக்கு இருந்தனர். ஆனால் நெய்யாற்றின்கரை எம்.எல்.ஏ செல்வராஜ் ராஜினாமா செய்து விட்டதால் பலம் ஒரு படி குறைந்து விட்டது.