காவிரி நீர் விவகாரம்: கர்நாடகத்துக்கு எதிராக தமிழக அரசு புதிய வழக்கு

காவிரி நீர் விவகாரம்
காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் பல ஆண்டுகாலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. இது குறித்து விசாரிக்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் தனது இடைக்காலத் தீர்ப்பை கடந்த 1991-ம் ஆண்டு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அந்தத் தீர்ப்பை கர்நாடகத்தில் பதவியில் இருந்த எந்த ஒரு அரசும் முறைப்படி அமல்படுத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி காவிரி நடுவர்மன்றம் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. என்ற அளவில் காவிரி நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
கர்நாடகத்தின் அடாவடி
எப்படி காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் சரிவர அமல்படுத்தவில்லையோ, அதே போன்று இறுதித்தீர்ப்பையும் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர அமல்படுத்தவில்லை. குறிப்பாக கோடை காலத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் விடுவிப்பதில்லை.
இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருந்துயருக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் மனு
இந்நிலையில் தமிழக அரசு கடந்த 15-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பினை கடந்த 2007-ம் ஆண்டு வழங்கியது. அதை கர்நாடகம் முறையாக அமல்படுத்த வேண்டும். தனது வாக்குறுதியை மீறி அது செயல்படக்கூடாது. காவிரி நீரை பகிர்ந்துகொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே 1892-ம் ஆண்டு, 1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தங்களை எல்லாம் கருத்தில் கொண்டுதான் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. தண்ணீர் பகிர்மானத்தைப் பொறுத்தமட்டில் நேர்மையான ஒதுக்கீடு நடைபெற வேண்டும்.
ஆனால் கர்நாடகத்தில் கோடை காலத்தில் சாகுபடி அளவை உயர்த்தி விடுகின்றனர். இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்து கிட்டத்தட்ட தண்ணீர் இல்லாத நிலைக்கு போய் விடுகிறது. இதன் காரணமாக ஜுன் மாதத்திலிருந்தும் அந்த மாநிலம் கூடுதல் தண்ணீரை தன்வயப்படுத்தி விட முடிகிறது. இதனால் தண்ணீர் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தமிழகம் தண்ணீரின்றி தத்தளிக்கிற நிலை ஏற்படுகிறது. இது காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கு எதிரானது.
ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் இந்தப் பிரச்சினை எழுகிறது. கர்நாடகம் கூடுதல் தண்ணீரை எடுத்துக்கொள்வது என்பது காவிரி நடுவர் மன்றம் 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் வழங்கிய இடைக்காலத்தீர்ப்பின் போது, கர்நாடகம் எடுத்த சொந்த நிலைப்பாட்டுக்கும் எதிரானது. எனவே கோடை காலத்தின்போது கர்நாடகம் உரிய அளவுக்கு அதிகமாக தண்ணீரை எடுத்துக்கொள்வதை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகமும் பதில் மனு
இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழகம் நாடி உள்ளது. நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீரை விடுவித்து வருகிறோம்.
கோடை காலத்தில் அணைகளில் நீர் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கர்நாடகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கிற வகையில் சட்டப்படி நாங்கள் நடவடிக்கை எடுப்போம். சட்டத்துறையை கலந்து ஆலோசித்து, 26-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications