ராணுவ தளபதி வி.கே.சிங்கை நீக்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்

ராணுவத்துக்கு தரமற்ற 600 வாகனங்களை கொள்முதல் செய்ய ஒப்புக் கொண்டால், தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் பெற்று தருவதாக தன்னிடம் முக்கிய நபர் ஒருவர் பேரம் பேசினார் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
மேலும் ராணுவ அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றி குறை கூறி பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தினால், நாடாளுமன்றத்தில் 2 நாட்களாக புயல் வீசி வருகிறது.
இன்று பாராளுமன்றம் கூடியதும் இந்த விவகாரம் பிரதான இடத்தை பிடித்தது. சிலர் லஞ்ச பேரம் பற்றி பேச, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சி எம்.பி.க்.கள், ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்கள், ராணுவ தளபதி வி.கே.சிங் தனது பதவிக்குரிய கடமையையும், கட்டுப்பாட்டையும் மீறி நடந்து கொண்டுள்ளார்.ராணுவத்தின் செயல்பாட்டை குறை கூறி, பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியது வரம்பு மீறிய, கண்ணியம் தவறிய செயல். எனவே ராணுவ தளபதி பதவியில் இருந்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தெலுங்கானா பிரச்சினையை எழுப்பி, ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ராணுவ தளபதி குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்கிறது? என்று கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளியால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications