மல்லையா மிரட்டலுக்கு பணிந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள்: ஸ்டிரைக் வாபஸ்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள், பொறியாளர்கள் உள்பட அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், உடனே சம்பள பாக்கியை வழங்கக் கோரியும் அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதிய மல்லையா வரும் 10ம் தேதிக்குள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இளநிலை ஊழியர்களுக்கு நாளைக்குள்ளும், விமானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் வரும் 10 அல்லது 11ம் தேதிக்குள்ளும் சம்பளம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இது தவிர நேற்றிரவு ஊழியர்களுடன் தனது இல்லத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே இன்று பணிக்கு திரும்பாவிட்டால் விமான சேவைகள் இயக்குனரகத்தை அணுகி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிவிட்டு அதை மூடுவிடுவேன் என்று ஊழியர்களை எச்சரித்தார்.
அவர் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.