திருவனந்தபுரம் அருகே காவல் நிலையத்தில் குண்டு வெடித்து கட்டிடம் இடிந்தது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதில் காவல் நிலையக் கட்டிடம் இடிந்து விழுந்தது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழு பகுதியில் காவல் நிலையம் உள்ளது. இங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டாசுகள், பல்வேறு குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள், அலுமினியம் பவுடர் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் காவல் நிலைய கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. இதன் தாக்கத்தால் 50 மீட்டர் தொலைவு வரை உள்ள சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.
இந்த சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.