திவாகரனிடம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விடிய விடிய விசாரணை!
சசிகலாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் கருணை கிடைத்தாலும் கூட அவரது உற்றார், உறவினர், ரத்த பந்தங்களுக்கு இன்னும் ஜெயலலிதாவின் கருணைப் பார்வை கிடைக்கவில்லை. இதனால் திவாகரன் மீது சமீபத்தில் போலீஸார் புதிதாக ஒரு வழக்கைப் போட்டு அதில் கைது செய்தனர்.
இந்த நிலையில், மன்னார்குடி மதுக்கூர் சாலையில் அரசு புறம்போக்கு நிலம் 6500 சதுர அடி நிலத்தை அபகரித்து தனது மனைப்பிரிவுகளுக்கு சாலை அமைத்ததாக திவாகரன், மிடாஸ் மோகன் உட்பட 12 பேர் மீது திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 25-ந்தேதி வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வழக்கில் திவாகரன், கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மனு செய்தனர்.
அதன்பேரில் மன்னார்குடி முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் பிள்ளை முன்னிலையில் இந்த மனு விசாரிக்கப்பட்டது. இதற்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து திவாகரனை அழைத்து வந்து போலீசார் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தினர்.
திவாகரனைஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அவரது வக்கீலும் அப்போது உடன் இருக்கலாம் என்றும் நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து திவாகரனை திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவரிடம் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தினர் போலீஸார்.
மிடாஸ் மோகனுடனான தொடர்பு குறித்து அப்போது அவரிடம் போலீஸார் குடைந்து குடைந்து கேட்டதாக தெரிகிறது.