பள்ளிகளின் கவனக்குறைவால் கலங்கி நின்ற 10ம் வகுப்பு மாணவர்கள்
சென்னை: தமிழ் முதல் தாளில் 8 மார்க் கேள்வி கடினமாக இருந்ததாக பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியர் தெரிவித்துள்ளனர்.
நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதேபோல் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்த மாணவ, மாணவிகளுக்கும் நேற்று முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் தமிழ் முதல் தாளில் குறைந்த மார்க்குகளுக்கு கேட்க வேண்டிய கேள்விகள் 8 மார்க் கேள்வியில் கேட்கப்பட்டதால் மாணவர்கள் கவலை அடைந்தனர்.
இது குறித்து மாணவ-மாணவியர் கூறுகையில்,
8 மார்க் கேள்வி கடினமாக இருந்தது. அதற்கு காரணம் புளுபிரிண்டில் 5 முதல் 6 பாடங்களில் இருந்து 8 மார்க் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. அதனால் அந்த பாடங்களில் குறைந்த மார்க் கேள்விகளே கேட்கப்பட வேண்டும். ஆனால் மாறாக அதில் இருந்து 8 மார்க் கேள்விகள் கேட்கப்பட்டன. அதனால் நாங்கள் ஏதோ எங்களுக்கு தெரிந்ததை எழுதினோம். இதனால் நன்றாக படித்த மாணவர்கள் கூட தமிழில் அதிக மார்க் எடுக்க முடியாது என்றனர்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறுகையில்,
புளுபிரிண்ட் திரித்தி வெளியிடப்பட்டது. அதில் இருந்து தான் கேள்விகளும் கேட்கப்பட்டன. ஆனால் சில பள்ளிகள் திருத்தப்பட்ட புளுபிரிண்டைப் பார்க்காமல் பழைய புளுபிரிண்டை வைத்தே மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்துள்ளன. அதனால் இந்த விஷயத்தில் தேர்வுத்துறை மீது எந்தவித தவறும் இல்லை என்றனர்.
இது தவிர நேற்று நெல்லையில் சமஸ்கிருதம் முதல் தாள் எழுதிய மாணவிகள் அதிர்ச்சி அடைந்து தேர்வு அறையிலேயே அழுதுவிட்டனர். காரணம் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டது தான். பிறகு வேறு வழியின்றி ஏதோ எழுதி வைத்துவிட்டு வந்துள்ளனர். இது குறித்து அவர்களின் பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு விசாரித்த போதுதான் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தெரியாமல் ஆசிரியர்கள் வேறொரு பாடத்திட்டத்தை நடத்தியது தெரிய வந்தது.
இப்படி பள்ளிகள் கவனக்குறைவாக இருப்பதால் பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள் தான்.












Click it and Unblock the Notifications