சுனாமி: உலகையே விழிப்புடன் இருக்க வைத்த இந்தியாவின் 'அலர்ட்'!

Subscribe to Oneindia Tamil

Tsunami Warning
சென்னை: 2004ல் ஏற்பட்ட மிகப் பயங்கர இந்தோனேசிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்த இந்தியா, இந்த முறை படு உஷாராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட இந்தியப் பெருங்கடலில் உள்ள அத்தனை நாடுகளையும் விழிப்புடன் இருக்க பேருதவி புரிந்துள்ளதாம்.

2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மிகப் பெரிய சுனாமி அலையில் சிக்கி இந்தியப் பெருங்கடல் நாடுகள் பெரும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இந்தியா மிகப் பெரிய சீரழிவை சந்தித்தது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் சின்னாபின்னமாயின. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அநியாயமாக பறிபோயின.

அப்போது நம்மில் பலருக்கும் சுனாமி என்றால் என்ன என்றே தெரியாத நிலை. சுனாமி குறித்த விழிப்புணர்வும், சுதாரிப்பும், உஷாரும் இல்லாததால் பல லட்சம் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாக காரணமாக அமைந்தது.

ஆனால் நேற்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிக பயங்கரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் மிகுந்த உஷார் நிலைக்குப் போய் விட்டன. குறிப்பாக தமிழக கடலோரப் பகுதி மக்கள் எல்லாம் மிகுந்த சுதாரிப்புடன் இருந்தனர். சுனாமியை வேடிக்கைப் பார்க்கப் போகும் அளவுக்கு மக்கள் மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்பட்டனர் - தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர்கள் தவறவில்லை என்பது இங்கு விசேஷமானது.

இந்திய விஞ்ஞானிகளும் நேற்று அபாரமாக செயல்பட்டனர். கடந்த 2004ல் சுனாமி வரப் போகிறது என்பதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் கோட்டை விட்ட இந்திய விஞ்ஞானிகள் இந்த முறை அப்படி எந்தத் தவறும் நேர வாய்ப்பளிக்கவில்லை. மாறாக, ஹைதராபாத்தில் உள்ள இந்திய சுனாமி முன்னெச்சரிக்கை மையமானது மிகுந்த சுறுசுறுப்புடனும், சுதாரிப்புடனும் செயல்பட்டது.

சுனாமி குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை அது உடனுக்குடன் இந்தியா முழுமைக்கும் அனுப்பியதோடு, இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கும் அனுப்பி வைத்து அத்தனை பேரும் விழிப்புடன் இருக்க வைத்தது. 28 நாடுகளுக்கும் ஆறு நிமிடத்திற்கு ஒரு முறை எச்சரிக்கைச் செய்தியையும், லேட்டஸ்ட் நிலவரத்தையும் இந்த மையம் அனுப்பி வைத்து அசத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையத்தின் இயக்குநர் டாக்டர் சதீஷ் ஷெனாய் இதுகுறித்துக் கூறுகையில், நிலநடுக்கத்திற்குப் பின்னர் சிறிய அளவிலான சுனாமி அலைகள் எழுந்தன. ஆனால் அதன் பின்னர் அது குறைந்து விட்டது. சுனாமி பேரலைகள் வருவற்கான வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அனைத்து நாடுகளுக்கும் அதை நாங்கள் தெரிவித்தோம். இந்தியாவிலும் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என்றார்.

கடந்த 2004ல் சுனாமி பேரலைகள் இந்தியாவைத் தாக்கி சீரழித்த பின்னர் ஹைதராபாத் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையமும், சென்னையில் உள்ள தேசிய கடலியல் தொழில்நுட்பக் கழகமும் இணைந்து சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தை ஹைதராபாத்தில் தொடங்கின. மேலும் இந்த இரு அமைப்புகளும் இணைந்து சுனாமி வருவதைக் கண்டுபிடிப்பது தொடர்பான மிதவைகளையும், கடலின் அடிமட்ட அழுத்தத்தைக் கண்டுபிடிப்பதற்கான சாதனங்களையும், கடல் மட்டம் மற்றும் அதன் அடிப்பகுதி வெப்ப நிலை, காற்றின் வேகம், திசை உள்ளிட்டவற்றை கணக்கிடும் கருவிகளையும் உருவாக்கின. இதன் மூலம்தான் தற்போது சுனாமி முன்னெச்சரிக்கைத் தகவல்களை இந்த மையம் வெளியிட்டு வருகிறது.

இந்தியா உருவாக்கி அமைத்துள்ள இந்த சுனாமி முன்னெச்சரிக்கை தகவல் மையத்தின் மூலம் படு துல்லியமாக நம்மால் சுனாமி வருமா, வராதா என்பதை கண்டறிய முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுனாமியைக் கண்டறிவற்கான மிதவைகள் உள்ளிட்டவை அரபிக் கடல், வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிறுவப்பட்டுள்ளன. எனவே எந்தப் பக்கம் சுனாமி வந்தாலும் அதை முன்கூட்டியே நம்மால் கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 28 நாடுகளுக்கும் நம்மால் உதவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+