ஏர் இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்க தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு
மும்பை: நட்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திலிருந்து இரண்டு பிரிவுகளாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பெரும் நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்கும் செயல்திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமையன்று ஒப்புதல் தெரிவித்திருந்தது.
இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க ரூ30 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடு செய்யவும் ஒட்டுமொத்த நிறுவனத்தை இரண்டு பிரிவாக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தற்போதைய பிரிவில் இப்போதுள்ள ஊழியர்களில் 19 ஆயிரம் பேர் பணியாற்றுவார்கள். மேலும், தொழில்நுட்ப சேவைப் பிரிவையும் தனி நிறுவனமாக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஏர் இந்தியாவின் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்தில் மொத்தம் 33 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். புதிய பிரிவுகள் உருவாக்குவது பற்றி அதிகாரபூர்வமாக விவரங்கள் தங்களுக்குக் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இம்முடிவு அதிருப்தி அளிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.