இலங்கை பற்றி மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதம்!
கொழும்பு: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நவம்பர் மாதம் இலங்கையின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் நியமித்திருந்த மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்க அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் தன்னார்வ அமைப்புகளுக்கும் ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 23-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து இலங்கையின் பதிலும் பெறப்படும். இதற்கு இலங்கைக்கு ஜூலை 23-ந் தேதி வரை அவகாசம் தரப்படும்.
பின்னர் இந்த இரு அறிக்கைகள் மீதும் நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரமைப்பில் விவாதிக்கப்படும்.
ஜெனிவா தீர்மானத்தோடு எல்லாம் முடிஞ்சு போச்சு என்றிருந்த இலங்கைக்கு இனி நிம்மதி இல்லை என்கிற வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஏற்கெனவே பல்வேறு மனித உரிமைப்புகளும் ஐ.நா. அமைப்பும் இலங்கையின் போர்க்குற்றத்தை பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.