இலங்கை தமிழர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை: நாராயணசாமி
காரைக்கால்: நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்,
திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி,
இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவன் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெற முடியவில்லை என்றார் நாராயணசாமி.
ஓ.கே. நாராயணசாமிஜி!
திமுகவுக்கு அக்கறை இல்லை:
இந் நிலையில் நாராயணசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
டெல்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் குழுவில் இருந்து திமுக இடம்பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு நல்லெண்ண குழுவை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா-இலங்கை நல்லுறவை நீடிப்பதோடு உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் இதன் மூலம் பெறுகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், வீட்டு வசதி, உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதரத்திற்காக இந்தியா உதவி செய்வதன் மூலம் அண்டை நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கும் ராஜதந்திர வழிமுறையாகும்.
ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூடங்குளத்தில் 2வது மின் நிலையம் ரஷ்யா உதவியோடு அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் என்றார்.