கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: திமுக பிரமுகரின் தொண்டு நிறுவனத்தில் மீண்டும் சிபிசிஐடி சோதனை
நாகர்கோவில்: கூடங்குளம் போராட்டத்துக்கு பண உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக பிரமுகரின் தொண்டு நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று மீண்டும் சோதனை நடத்தினர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பண உதவி செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டத்துக்கு உதவி செய்தது தெரியவந்தது. அந்த நிறுவனங்களில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், கருங்கல் பகுதியில் உள்ள தி.மு.க. பிரமுகர் மனோ தங்கராஜின் குட்விஷன் என்ற தொண்டு நிறுவனம் மீதும் புகார் எழுந்தது. அங்கு வெளிநாட்டில் இருந்து சமூக சேவை பணிக்காக அனுப்பப்பட்ட பணம் கூடங்குளம் போராட்டத்துக்காக முறைகேடாக செலவிடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் சில வாரங்களுக்கு முன் சிபி.சி.ஐ.டி போலீசார் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர்.
இந் நிலையில் இன்று மீண்டும் அந்த தொண்டு நிறுவனத்தில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் லியோ தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். ஊழியர்களிடமும் விசாரணை நடந்தது.












Click it and Unblock the Notifications