''மதுரை மாநாட்டுக்குப் பின் தமிழகத்தில் பாஜகவின் புதிய அத்தியாயம் தொடங்கும்''!
சென்னை: சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கை சென்றுள்ள எம்பிக்கள் குழுவில் அதிமுக, திமுக பங்கேற்காதது வருத்தம் அளிப்பதாக தமிழக பாஜக மேலிட பார்வையாளர் முரளிதர ராவ் கூறினார்.
பாஜக அகில இந்திய செயலாளரான அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
திருச்சியில் பாஜகவின் 4வது மாநில மாநாடு நடைபெற்றது. இதைதொடர்ந்து 13 வருடங்களுக்கு பின்பு தாமரை சங்கமத்தின் 5வது மாநில மாநாடு மதுரையில் 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் அரசியலில் மிக முக்கியமான நிலை எடுக்கும் கட்சியாக பாஜக உருவாகும். சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டின் பந்தல் அமைக்கப்பட உள்ளது.
மாநாட்டில் அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், கர்நாடக முதல்வர் சதானந்த கௌடாஉள்பட பல அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு பிறகு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும்.
சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. இந்தக் குழுவினர் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்னென்ன நிவாரணம் வழங்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட மக்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தேவைகள் உள்ளது? என்பதை எல்லாம் மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்.
இந்தக் குழுவில் அதிமுக, திமுக எம்பிக்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். குழுவில் கலந்து கொண்டால்தான் அவர்கள் கருத்துக்களை தெளிவாக சொல்ல முடியும். கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம். இவர்களை பங்கேற்கச் செய்வதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கையாகும். மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது. டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். மத்திய அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையால்தான் இவர்கள் சந்தித்துப் பேசி உள்ளனர்.
இவர்கள் சந்தித்துப் பேசியது, ஜனாதிபதி தேர்தலுக்காக அல்ல. தமிழ்நாட்டில் அதிமுகவுடனோ அல்லது திமுகவுடனோ கூட்டணி அமைப்பது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து பேசுவோம் என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், கர்நாடக அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதை பெறுவதற்கு நமக்கு முழு உரிமை உள்ளது. காவிரியில் தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் பாஜக துணையாக இருக்கும். தேவைப்படுமானால் போராடுவதற்கும் பாஜக தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கட்சி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. புதுக்கோட்டை சட்டசபை இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி சம்பந்தமாக முடிவு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications