புதுவகை மாம்பழத்திற்கு உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பெயர்
லக்னோ: உத்தர பிரதேசத்தின் இளம் முதல்வரான அகிலேஷ் யாதவை கௌரவிக்கும் வகையில் புதுவகை மாம்பழத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் பத்மஸ்ரீ விருது பெற்ற தோட்டக்கலை நிபுணர் ஹாஜி கலிமுல்லா கான். அவர் தங்கள் மாநிலத்தின் இளம் முதல்வரான அகிலேஷ் யாதவை கௌரவிக்கும் வகையில் தனது தோட்டத்தில் விளைந்த புதுவகை மாம்பழத்திற்கு அகிலேஷின் பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து கலிமுல்லா கான் கூறுகையில்,
தற்போது தான் 5 வயதாகும் ஒரு மாமரம் காய்த்துள்ளது. எந்த ஒரு மாமரமும் இத்தனை இளம் வயதில் காய்க்காது. அநத் இளம் மரத்தில் நல்ல தரமான கனி வந்துள்ளதால் அந்த மாம்பழத்திற்கு முதல்வர் அகிலேஷின் பெயர் வைக்க முடிவு செய்தேன்.
அகிலேஷ் பெயர் வைத்துள்ள மாம்பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது. அது நன்றாக தித்திக்கும். இன்னமும் பழுக்க வேண்டியுள்ள அந்த பழத்தின் எடை 1 கிலோ என்றார்.
மாம்பழத்திற்கு பெயர் போன மஹிலாபாத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்(70) வகை, வகையான பழங்கள் அதிலும் குறி்பபாக மாம்பழங்கள் உற்பத்தி செய்வதில் வல்லவர். கடந்த ஆண்டு விளைவித்த புதுவகை மாம்பழத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரும், 2010ம் ஆண்டு விளைந்த மாம்பழத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பெயரும் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வடிவம் மற்றும் அளவில் உள்ள 300 வகை மாம்பழங்களை விளைவித்து சாதனை படைத்த கலிமுல்லா கான் பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஒரே மரத்தில் பல்வேறு வகையான மாம்பழங்களை விளைவித்தது தான் அவரது சாதனை ஆகும்.












Click it and Unblock the Notifications