சோம்நாத் சட்டர்ஜியை ஜனாதிபதியாக்க கருணாநிதி யோசனை: குரேஷிக்கு முலாயம் ஆதரவு
துணை ஜனாதிபதி அன்சாரி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கரன் சிங் ஆகியோரில் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாமா என்ற சோனியா காந்தியின் யோசனையுடன் கருணாநிதியை இரு நாட்களுக்கு முன் சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியிடம், சோம்நாத்தை நிறுத்தலாம் என்று கருணாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் சற்றும் நினைக்காத பெயரை கருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளை ஒருங்கிணைக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.
பழுத்த அரசியல் அனுபவமும், இந்திய அரசியல் சட்டத்தில் பெரும் நிபுணத்துவமும் கொண்ட சோம்நாத் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.
அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இடதுசாரித் தலைவர் என்பதால் மம்தா பானர்ஜியின் ஆதரவு கிடைப்பது சந்தேகமே என்று கருணாநிதியிடம் ஆண்டனி கூறியதாகத் தெரிகிறது.
அதே போல இடதுசாரித் தலைவர்களிலேயே சிலருக்கு சோம்நாத் சாட்டர்ஜியைப் பிடிக்காது. அவருக்கும் மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்துக்கும் இடையிலான மோதல் மிகப் பிரபலமானது.
இதனால் சோம்நாத் சட்டர்ஜியை காங்கிரஸ் ஏற்குமா என்பது சந்தேகமே.
அரசியல்வாதி ஜனாதிபதியாவதில் தவறில்லை-சோம்நாத்:
இந் நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, ஒரு அரசியல்வாதி ஜனாதிபதியாவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
அரசியல் சாராதவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியிருந்த நிலையில், சோம்நாத் சாட்டர்ஜி இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவரும் தயார் என்றே தெரிகிறது.
தேர்தல் ஆணையர் குரேஷிக்கு முலாயம் ஆதரவு:
இந் நிலையில் இதுவரை அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கலாம் என்று கூறி வந்த சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் திடீரென இன்னொரு இஸ்லாமியரான தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியை ஜனாதிபதி தேர்தலுக்கு நிறுத்தலாம் என்று கூறியுள்ளார்.
கலாமை ஆதரிக்க காங்கிரஸ் தயாராக இல்லாததால் முலாயம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.