மதுரை ஆதீனத்திற்கு எதிராக அணி திரளும் மடாதிபதிகள்- தருமபுரத்தில் அவசர ஆலோசனை

தமிழகத்திலேயே மிகப் பழமையான ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருக்கும் அருணகிரிநாத சாமிகள் சமீபத்தில் செய்த செயலால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சாமிகள் தலைமையில் இன்று மாலை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதில் மதுரை ஆதீனத்தின் முடிவுகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் மதுரை ஆதீனத்தை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதீனங்களின் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து அவர்களுடன் இணைந்து இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து கட்சிகளும், அமைப்புகளும் அணி திரண்டு மதுரை ஆதீன மீட்பு நடவடிக்கைகளில் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications