மதுரையில் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: ராமர் கோவிலை தகர்க்க சதியா?
அதே போல பாஜகவின் மாநில மாநாடு வரும் 10ம் தேதி விரகனூரில் நடைபெறவுள்ளது.
இதற்கான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு பந்தல் பகுதிக்குள் செல்பவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந் நிலையில் இன்று அதிகாலை மதுரை அண்ணா நகர் பகுதியில் ஒரு தியேட்டர் அருகேயுள்ள திருமண மகாலின் பின்புறம் உள்ள ராமர் கோவிலுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது.
சைக்கிள் கேரியரில் ஒரு டப்பாவில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. டைமருடன் கூடிய அந்த குண்டு வெடித்துள்ளது.
கோவில் அருகே வெடிக்கும்படி இந்த குண்டு வைக்கப்பட்டுள்ளதால் ராமர் கோவிலை தகர்க்கும் நோக்கத்தில் நடந்த சதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் பாஜக மாநாட்டில் பங்கேற்க மூத்த தலைவர்களான அத்வானி, நரேந்திர மோடி உள்ளிட்டோர் மதுரைக்கு அத்வானி வரவுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அத்வானி மதுரைக்கு வந்திருந்தபோது அவர் செல்ல இருந்த பாதையான ஆஸ்டின்பட்டி அருகே உள்ள ஒரு தரை பாலத்தில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு உரிய நேரத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது நினைவுகூறத்தக்கது.
ராமர் கோவில் பூசாரி வாசுதேவன் பாண்டே, காவலாளி மூக்கையா ஆகியோர் கூறுகையில், கடந்த 3 நாட்களாகவே கோவில் அருகே இந்த சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதுபற்றி லோக்கல் போலீசுக்கும் தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. இந் நிலையில் தான் குண்டு வெடித்துள்ளது என்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் நடந்துள்ள 5வது வெடிகுண்டு தொடர்பான சம்பவம் இதுவாகும். முதலில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலும், அடுத்து புதூர் பஸ் நிலையத்திலும் குண்டுகள் வெடித்தன. பின்னர் திருவாதவூர் பஸ்சில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்காவது முறையாக அண்ணாநகரில் உள்ள ஆவின் பால் பண்ணை அருகே குண்டு வெடிப்பு நடந்தது. அடுத்து அத்வானி செல்லும் பாதையில் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.