குடிபோதையில் பாரில் ரகளை- போலீஸுக்கு அடி: பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மகன் கைது!!!
சீனிவாசனின் மகன் அஸ்வின். இவருக்கு வயது 40 ஆகிறது. இவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவராம். தனது தந்தை சீனிவாசன் நடத்தி வரும் ஐஎல்சி டெக்ஸ்டைல்ஸ் நிறுவன இயக்குநர் குழுவில் இவரும் ஒருவர். கடந்த 2000மாவது ஆண்டு இவரே காசா மியா என்ற ஒரு நிறுவனத்தை சொந்தமாகவும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள எஸ்கோபார் என்ற பப்புக்கு தனது நண்பர் அவி கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் போனார். அங்கு இருவரும் மது அருந்தினர். நள்ளிரவு தாண்டியும் இவர்களின் கச்சேரி ஓயவில்லை. 1.30 மணியளவில் இன்னும் ஊத்திக் கொடுங்க குடிக்க என்று கேட்டுள்ளனர். ஆனால் இது கடையை மூடும் நேரம். இனிமேலும் பாரைத் திறந்து வைத்திருக்கக் கூடாது என்று பார் நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஆனால் அதை இருவரும் கேட்கவில்லை. மாறாக பார் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் இறங்கினர்.
அதுவரை குடித்ததற்கான ரூ. 30,000 பில்லைக் கட்ட மாட்டோம் என்று வாதிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதையடுத்து பார் மேலாளர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக பில் தொகையைக் கட்டி விட்டு நடையைக் கட்டுமாறு அஸ்வினை போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் நிதானத்தில் இல்லாத அஸ்வின் போலீஸ்காரர்கள் மீது பாய்ந்துள்ளார். ஒரு போலீஸ்காரர் முகத்தில் குத்து விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அஸ்வினையும், அவியையும் அள்ளிக் கொண்டு காவல் நிலையத்திற்கு விரைந்தனர்.
இரவு முழுவதும் இருவரையும் காவல் நிலையத்திலேயே உட்கார வைத்தனர். அடுத்த நாள் காலையில் பல்வேறு தரப்பிலிருந்தும் போன்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் பிரஷருக்குப் பணிய நேரிட்டது காவல்துறை. இதையடுத்து அஸ்வினை போலீஸார் சொந்த பெயிலில் விடுவித்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பிரதாப் திகோங்கர் கூறுகையில், எஸ்கோபார் பாரில் பிரச்சினை என்று தகவல் வந்ததும் அங்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அங்கிருந்த இருவரில் ஒருவர் எங்களது காவலரையே அடித்து விட்டார். இதனால் அவரைக் கைது செய்தோம். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவரும் மது போதையில் இருந்ததை உறுதி செய்து கொண்டோம்.
அவர்கள் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியரைத் தாக்கியது, மிரட்டல், அவதூறாக நடப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.
தற்போது ஜாமீனில் விடப்பட்டிருந்தாலும் அஸ்வினும், அவியும் திங்கள்கிழமை தோறும் பந்த்ரா காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
கிரிக்கெட் வாரியத் தலைவரின் மகன் குடிபோதையில் மது பாரில் அநாகரீகமாக நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.