சர்ச்சைக்குரிய ஜார்க்கண்ட் ராஜ்யசபா தேர்தலில் பாஜக தோல்வி!
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் எஸ்.எஸ்.அலுவாலியா தோல்வியடைந்துள்ளார். இதனால் அந்தக் கட்சி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்த மாநிலத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா பதவிகளுக்கு கடந்த மாதமே தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், பாஜக சார்பில் நிதின் கட்காரியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்சூமன் மிஸ்ராவுக்கு அந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இங்கிலாந்தில் வசிக்கும் அவர் பணம் கொடுத்த சீட் வாங்கியதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ராஜ்யசபா பாஜக துணைத் தலைவரான எஸ்.எஸ்.அலுவாலியாவை அந்தக் கட்சி வேட்பாளராக அறிவித்தது.
அலுவாலியாவுக்கு ஆதரவு தருமாறு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் பாஜக கோரி வந்தது. ஆனால், அலுவாலியாவை ஆதரிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மறுத்துவிட்டது. அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அதே போல காங்கிரசும் களமிறங்கியது.
2 இடங்களுக்கு 3 பேர் நின்றதால் கடும் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலைகள் தீவிரமடைந்தன. இந்த நிலையில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களின் வீடுகளை திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பெருமளவில் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் தொழிலதிபரும், சுயேச்சையாக போட்டியிட்டவருமான ஆர்.கே.அகர்வால் வீடு மற்றும் அவரது மருமகன் செளமித்ரா சாஹாவின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அப்போது பெருமளவில் பணம் சிக்கியது. அகர்வால் கூட்டாளியின் காரிலிருந்து ரூ. 2.15 கோடி பணம் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேர்தலை ரத்து செய்து வேறு தேதியில் தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம்.
இப்படி சர்ச்சைக்கு மத்தியில் இன்று நடந்த தேர்தலில் தற்போது காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பல்மச்சுவுமம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் வெற்றி பெற்றுவிட்டனர்.
ஆனால் பாஜக சார்பில் போட்டியிட்ட மூத்த தலைவரும், முன்னாள் ராஜ்யசபா துணைத் தலைவருமான எஸ்.எஸ்.அலுவாலியா தோல்வியடைந்தார். அவருக்கு 23 ஓட்டுக்கள் தேவைப்பட்டன. ஆனால் அவரால் 20 ஓட்டுக்களை மட்டுமே பெற முடிந்தது.