கூடங்குளம் 100% மின்சாரமும் தமிழகத்துக்கே: இது நாராயணசாமி
டெல்லி: கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் பரிசீலித்து வருகிறார் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அணு மின் நிலையங்கள் உள்ள நாடுகள் இடையே பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச ஒருங்கிணைப்பு உள்ளதா என்றும், அணு உலை விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்படும் என்று லோக்சபாவில் அதிமுக எம்.பி. வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,
ஐப்பானின் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் 6 குழுக்களை அமைத்துள்ளார்.
சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் பாதிப்புக்குள்ளாகாதவாறு இந்த அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா மூலம் அணு உலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வழிவகை செய்யப்படும் என்றார்.
டி.ஆர். பாலு(திமுக):
தமிழகத்தில் கடும் மின்தட்டுப்பாடு உள்ளதால் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே மத்திய அரசு வழங்குமா?
அதற்கு நாராயணசாமி அளித்த பதில்,
கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கோரிக்கையை பிரதமர் பரிசீலித்து வருகிறார் என்றார்.
டி.கே. ரங்கராஜன்(சிபிஎம்):
தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அதைப் போக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று டி.கே. ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பதில்,
வேலையில்லாதவர்களுக்கான மாற்று திட்டங்களை அறிமுகப்படுத்தும் வசதி மத்திய அரசுக்கு இல்லை. அதனால் தமிழக அரசு தான் இந்த விவகாரம் குறி்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.