ராணுவ வாகன ஊழல்: முன்னாள் அதிகாரி தேஜிந்தர்சிங்கிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மணிநேரம் விசாரணை
செக் குடியரசு நாட்டின் தாத்ரா நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த 600 வாகனங்களை ராணுவத்துக்கு கொள்முதல் செய்ய முன்னாள் ராணுவ அதிகாரி தேஜிந்தர்சிங் தம்மிடம் ரூ14 கோடி லஞ்ச பேரம் பேசியதாக ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங். புகார் தெரிவித்திருந்தார். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி ராணுவ தளபதி வி.கே.சிங்கின் வாக்குமூலத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். அதேபோன்று, இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் ராணுவ அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ராணுவ தளபதியிடம் பேரம் பேசியதாக கூறப்படும் தேஜிந்தர்சிங்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பேரம் பேசப்பட்டதாக கூறப்படும், 2010-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அன்று ராணுவ தளபதி வி.கே.சிங்கின் அலுவலகத்திற்கு அவர் ஏன் சென்றார் என்றும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் தேஜிந்தர்சிங் தம் மீதான குற்றச்சாட்டை மறுத்து வி.கே.சிங் மீது தாம் வழக்குத் தொடர்ந்திருப்பதை விவரித்தார்.