புலிகளைப் பாதுகாக்க மாநிலங்களில் சிறப்பு அதிரடிப்படைகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர்
டெல்லி: நாட்டின் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்க சிறப்பு அதிரடி படைகளை உருவாக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்தியாவில் 17 மாநிலங்களில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் 1,706 புலிகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
புலிகளை காப்பதற்காக அனைத்து மாநிலங்களும் சிறப்பு அதிரடி படைகளை உருவாக்குமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது. இந்த சிறப்பு அதிரடி படைகளை அமைக்கும் பணிகளை அனைத்து மாநிலங்களும் விரைவுபடுத்துவதை உறுதி செய்யுமாறு புலிகள் காப்பக கள இயக்குனர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியப் புலிகள்..
உலகின் புலிகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இந்தியாவில் வசிக்கின்றன. அவற்றை காப்பதற்கு களப்பாதுகாப்பு மிகவும் முக்கியம் ஆகும். புலிகளை பாதுகாப்பதில் உள்ளூர் பணியாளர்களை அமர்த்துவதற்கு மத்திய அரசு பெரிய உதவி வருகிறது..
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 100 விழுக்காடு உதவி செய்தும் கூட சிறப்பு அதிரடி படைகள் அமர்த்தப்படவில்லை.
அதே நேரத்தில் சிறப்பு அதிரடி படைகளை உருவாக்கிய முதல் மாநிலமான கர்நாடகத்தைப் பாராட்டுகிறோம்.
புலிகளைப் பாதுகாப்பதற்கான நிதியை ரூ. ஆயிரத்து 216 கோடியே 86 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் அவர்.