நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி
நாகூர்: நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி தமீம் அன்சாரி மற்றும் அப்துல் சமது ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
நாகூர் ஆண்டவர் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் 455வது ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகை அபிராமி அம்மன் கோயில் வாசலில் இருந்து நேற்று (புதன்கிழமை) வானவேடிக்கையுடன் புறப்பட்டது. இந்த ஊர்வலம் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, காடம்பாடி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
அப்போது சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை நாகூர் குங்சாலி மரைக்காயர் தெரு வழியாக வந்தபோது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு ரதம் மின்கம்பிகளில் சிக்கியதில் அதைத் தள்ளிக் கொண்டு வந்த தமீம் அன்சாரி மற்றும் அப்துல் சமது ஆகிய இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
சந்தனக்கூடு ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பேர் பலியானதற்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் கவனக்குறைவு தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்றது. எனவே, பலியான 2 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000ம் மற்றும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10,000ம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.