எனது மகன் தொடர்ந்து சட்டிஸ்கரில்தான் பணியாற்ற வேண்டும்-மேனனின் தந்தை வரதாஸ்
சென்னை: எனது மகன் அலெக்ஸ் பால் மேனன் விடுவிக்கப்பட்டிருக்கும் செய்தி எனக்கு வந்து சேர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. எனது மகன் விடுதலைக்காக பாடுபட்ட ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்று அலெக்ஸின் தந்தை வரதாஸ் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் அலெக்ஸ் பால் மேனனின் பெற்றோர் தங்கியுள்ளனர். அலெக்ஸ் விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து அவரது தந்தை வரதாஸை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது வரதாஸ் கூறுகையில், சற்று முன்னர்தான் இந்த செய்தி எங்களுக்கு வந்தது. இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இதற்காக முயற்சிகள் எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல ஆறுதல் கூறிய, எங்களை வந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ். இளக்கோவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், டி.கே. ரங்கராஜன் எம்.பி. மற்றும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த விஷயத்தில் அக்கறை காட்டிய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் என்னை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன கொளத்தூர் எம்.எல்.ஏ. மு.க. ஸ்டாலினுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது தவிர எனது மகனை விடுதலை செய்ததற்காக மாவோயிஸ்டுகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மகன் தொடர்ந்து அங்கேயேதான் பணியாற்றுவார். அவர் தொடர்ந்து அஙேகேயே பணியாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட. நான் விரைவில் சட்டிஸ்கர் செல்லவுள்ளேன்.
மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு மாநில அரசு உறுதியான, விரைவான, சமூகமான முடிவை எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வரதாஸ்.
சொந்த ஊரில் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
இதற்கிடையே, அலெக்ஸ் பால் மேனனின் விடுதலையை அவரது சொந்த ஊரான வள்ளியூர் அருகே உள்ள சமாதானபுரத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. மேலும் அலெக்ஸுக்காக அவரது ஊர் மக்கள் பிரார்த்தனை செய்தனர்.












Click it and Unblock the Notifications