மதுரை ஆதீனத்திற்கு நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கெளதம் என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில்,
மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆதீனத்துக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது. இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்க விதிகள் உள்ளன. அதற்கு மாறாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுள்ளார்.
நித்யானந்தா இதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார். இது லஞ்சம் கொடுத்ததற்கு சமமாகும். மதுரை ஆதினம் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் இவர் பொறுப்பு ஏற்றுள்ளார். எனவே மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடர தடை விதிக்க வேண்டும். ஆதீன சொத்துக்களை கையாளவும் அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகள் கர்ணன் மற்றும் ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜரானார்.
ஆனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக இந்து அறநிலையத்துறையிடம் முறையீடு செய்யும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மேலும், ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவுக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை வருமா?
இதற்கிடையே, மதுரை ஆதீனத் தலைவராக நித்தியானந்தா பதவியேற்பதைத் தடை செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை நாளை மேற்கொள்ளவுள்ளது மதுரை உயர்நீதிமன்றக் கிளை.
நித்தியானந்தா நியமனத்தை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ள நிலையில் நாளை இதே போன்றதொரு வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.