புதுக்கோட்டை இடைத் தேர்தல்- திருமண மண்டப உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்கு திருமண மண்டபங்களும் விடுதிகளும் பயன்படுத்தப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கலையரசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடைத் தேர்தலையொட்டி திருமணம் மண்டபம், தங்கும் விடுதிகள், அடகுக் கடைகள், வட்டிக் கடைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் ஆட்சியர் கலையரசி பேசியதாவது:
புதுக்கோட்டையில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளை அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ கூட்டங்கள் நடத்த - தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தினால் வேட்பாளரின் செலவுக் கணக்கில்தான அது சேர்க்கப்படும். இதனால் திருமண மண்டப உரிமையாளர்கள் நாள்தோறும் இதுபற்றிய விவரங்களை வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்தாக வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில் விடுதிகள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்தால் அதுபற்றியும் தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.
அறிமுகம் இல்லாத வெளியூர் நபர்களை விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் தங்களது விடுவிதிகளில் இருந்து கொடுக்கப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதேபோல் அடகுக் கடை மற்றும் வட்டிக் கடையினரும் தங்களது வரவு செலவு விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.