கேரள சிபிஎம்மில் கடும் மோதல்: அச்சுதானந்தன் - பினரயி மோதல் உச்சகட்டம்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மூத்த இடதுசாரித் தலைவரும் முன்னாள் முதல்வருமான வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பினரயி விஜயனுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ள நிலையில் என்ன நிலையை எடுப்பது என்பது குறித்து அக்கட்சி மேலிடம் தவித்து வருகிறது.
கோழிக்கோடு ஓஞ்சியம் பகுதியை மார்க்சிஸ்ட் பிரமுகரும் அச்சுதானந்தனின் தீவிர ஆதரவாளருமான சந்திரசேகரன் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து பினரயியுடனான அச்சுதானந்தல் மோதல் பகிரங்கமாக வெடித்தது.
சந்திரசேகரனை ஒரு கட்சித் துரோகி என்று பினரயி வர்ணித்திருந்தார். இதற்கு அச்சுதானந்தன் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பினரயி கருத்து பற்றி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சுதானந்தன், 1964-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் மறைந்த டாங்கேயின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது என்று சாடியிருந்தார். இதனாலேதான் அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாகக் தேசியக் கவுன்சிலில் இடம்பெற்றிருந்த தாமும் இதர 30 பேரும் முன்வந்தோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்களை துரோகிகள் என்றது. இதையேதான் இப்போது பினரயி விஜயன் சொல்கிறார். இது மிகவும் தவறானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
விஜயனை பகிரங்கமாகக் கண்டித்துப் பேசியதுடன் புதிய கட்சி தொடங்க வேண்டிய சூழலையும் உருவாக்குவதாக மறைமுகமாக அச்சுதானந்தன் குறிப்பிட்டது கேரள மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக விஜயன் கட்சி மேலிடத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். அச்சுதானந்தன் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே கேரள அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாகும். மூத்த தலைவரான அச்சுதானந்தன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் அது மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் மேலிடத்துக்குத் தெரியாதது அல்ல.
அதே நேரத்தில் மாநிலச் செயலாளரை மீறி ஒரு மூத்த தலைவர் செயல்படுவது என்பதும் கட்சிக்கு ஆரோக்கியமானதும் அல்ல. இதனால் இருதலைக் கொள்ளியாய் மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் தவித்து வருகிறது.