கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா விரைவில் ராஜினாமா?
கார்வார்: கர்நாடக பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் அணிசாரா பாஜக எம்.எல்.ஏக்கள் அணி ஒன்று கோவா ரிசார்ட்டுக்குச் சென்று அங்கு ஆலோசனை நடத்தி வருகிறது.
கர்நாடக முதல்வர் சதானந்தா கெளடாவை நீக்கிவிட்டு தமக்கே முதல்வர் பதவி வரவேண்டும் என்பது எதியூரப்பாவின் நீண்டகால கோரிக்கை. இதற்காக ஒவ்வொருமுறையும் போராடிப பார்த்து வருகிறார். இம்முறை எதியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கட்சித் தலைமைக்கு சதானந்தாவும் கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவும் எழுதிய கடிதம் எதியூரப்பாவுக்கு கூரிய வாளாக இருக்கிறது.
எதியூரப்பாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் பலர் ராஜினாமா செய்திருக்கின்றனர்
இநிந்லையில் எதியூரப்பா- சதானந்த கெளடா என எந்த கோஷ்டியையும் சேராத எம்.எல்.ஏக்கள் 25 பேர் கோவாவில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இத்தகவலை அமைச்சர் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் பதவியிலிருந்து சதானந்தாவை நீக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை எதியூரப்பா கைவிடாவிட்டால் பேசாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்.. ஏனெனில் கர்நாடக மாநில மக்கள், பாஜக மீது அதிருப்தி அடைந்திருக்கின்றனர் என்றார் அமைச்சர் ஆனந்த்.
கர்நாடக பாஜகவைப் பொறுத்தவரையில் சதானந்த கெளடா, ஈஸ்வரப்பா, அனந்தகுமார், எதியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர்தான் பஞ்ச பாண்டவர்கள். தற்போதைய பிரச்சனைக்கு இவர்கள் ஒன்று கூடி பேசித் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அணிசாரா எம்.எல்.ஏக்களின் கருத்து.
இந் நிலையில் சதானந்த கெளடாவுக்கு ஆட்சி செய்யவே தெரியவில்லை, அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார் என எதியூரப்பா பேட்டியளித்துள்ளார். இதன்மூலம் முதல்வரை மாற்ற வேண்டும் என்று அவர் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால் தானும் 53 எம்எல்ஏக்களும் அடுத்த சில நாட்களில் ராஜினாமா செய்வோம் என்றரீதியில் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் விரைவிலேயே சதானந்த கெளடா ராஜினாமா செய்யலாம், அவருக்குப் பதிலாக எதியூரப்பா ஆதரவாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந் நிலையில் கெளடா ராஜினாமா செய்யப் போவதாகவும் தகவல் பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications