எல்லைகளில் இருந்து படை விலக்கம் செய்ய பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் இல்லை- இந்தியா விளக்கம்
டெல்லி: மும்பை தாக்குதலுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் நாளேடு வெளியிட்ட செய்திக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் நாளேட்டில் நேற்று எல்லைப் பகுதியில் படைகளை இந்தியா விலக்கிக் கொள்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் இந்தியா படைகளைக் குவித்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் குவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கடந்த மாதம் பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் போது எல்லைகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புக் கொண்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. படைகளைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடம் எல்லை என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சியாச்சின் எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவில் பாகிஸ்தான் படையினர் சிக்கிய போது அங்கிருந்து இருநாடுகளுமே படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி கியானி கூறியிருந்தார். ஆனால் இந்தியா அதை அப்போது ஏற்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் கரகோரம் கணவாய் வழியாக லடாக் பகுதிக்கு சீனா மற்றும் பாகிஸ்தானால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைத் தடுக்கும் வகையில் 22 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் இந்தியப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பல்திஷ்தான் பகுதிகளிலும் சீனா தனது நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் இருந்து படைவிலக்கம் என்பதை ஏற்க முடியாது என்பதும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கருத்து.












Click it and Unblock the Notifications