சிடி வராததால் புதுவை +2 தேர்வு முடிவுகள் லேட்- முதல் 3 இடங்களும் மாணவியருக்கே!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கான பிளஸ்டூ தேர்வு முடிவுகள் அடங்கிய சிடி வர தாமதமானதால், முடிவுகளும் தாமதமாகவே வெளியாகின. முதல்வர் ரங்கசாமியே தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி புதுவை யூனியன் பிரதேசத்தில் முதல் மூன்று இடங்களையும் மாணவியரே பெற்றுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகவில்லை. இதனால் மாணவ, மாணவியர் பெரும் குழப்பமடைந்தனர். ஆனால் தேர்வு முடிவு அடங்கிய சிடி வரத் தாமதமானதால் முடிவுகள் வெளியாகவில்லை என்று கூறப்பட்டது.
பிற்பகல் 2.15 மணியளவில்தான் சிடி வந்து முடிவுளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
லாஸ்பேட்டை குளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர். பிரெஞ்சுப் பாடத்தை முதல் பாடமாக எடுத்துப் படித்த சொப்னா என்ற மாணவி 1190 மதிப்பெண்கள் பெற்று யூனியன் பிரதேசத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.
ஷோபனா என்பவர் 1187 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ஸ்ரீரம்யா என்ற மாணவி 1186 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
புதுவை மற்றும் காரைக்காலில் 84.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 75.67 சதவீதமும், தனியார் பள்ளி மாணவர்கள் 95.07 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.