தமிழ்நாடு.. போலி பாஸ்போர்ட்.. பிரான்ஸ்.. கைது.. சிறை.. டெல்லி விமான நிலையம்.. மீண்டும் கைது.. சிறை
டெல்லி: போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் சென்று அங்கு கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு டெல்லி திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த முகமது அன்வர் அலி. இவர் 2009ம் ஆண்டில் சென்னையில் இருந்து மரிய அந்தோணி கிளாடி என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டின் போலி பாஸ்போர்ட் மூலம் பாரீஸ் சென்றார்.
பாரீஸ் விமான நிலையத்தில் பிடிபட்ட அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
23 மாத தண்டனைக்குப்பின் முகமது அன்வர் அலி நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பாரீசில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.
விமான நிலையத்தில் அவரை இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளை கைது செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது இந்திய குடியுரிமை சட்ட மீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பத் ராஜாமணி என்ற ஏஜெண்ட் ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டு மரிய அந்தோணி கிளாடி என்பவர் பெயரில் பிரான்ஸ் நாட்டு போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த ஏஜென்ட் குறித்து தமிழக போலீசாருக்கு டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.