பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: மாட்டு வண்டி வாங்க கடன் கோரி வங்கியில் விண்ணப்பம்
சேலம்: பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததையடுத்து இளைஞர்கள் 10 பேர் மாட்டு வண்டி, குதிரை வண்டி வாங்க கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த 23ம் தேதி பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவுக்கு லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இது அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களை பெரிதும் அதிருப்தியடைச் செய்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று அதிமுகவும், இன்று திமுகவும் ஆர்ப்பாட்டம் நடித்தின. நாளை பாஜக பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்ந்த கையோடு தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விற்கும் விலைக்கு அதை வாங்கி வண்டி ஓட்ட முடியாது என்று கூறி மாட்டு வண்டி, குதிரை வண்டி வாங்க 10 இளைஞர்கள் கனரா வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
பெட்ரோல் விலை ஒரேயடியாக உயர்ந்துள்ளதால் தாங்கள் இனி மாட்டு வண்டியோ, குதிரை வண்டியோ தான் ஓட்டப் போவதாகவும், அதனை வாங்க கடன் தருமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.