அரசு துறையில் 15,000 காலியிடங்கள் நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் தகவல்
நெல்லை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் இந்த ஆண்டு 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என நெல்லையில் நடந்த கல்வி நிறுவன திறப்பு விழாவில் தமிழக அரசு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
நெல்லை-தச்சநல்லூர் அருகே மதுரை புறவழிச்சாலையில் வேதிக் வித்யாஸ்ரம் சிபிஎஸ்இ பள்ளி திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை பள்ளி முதல்வர் ஸ்ரீவித்யா முத்துகுமார் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய தலைவர் நட்ராஜ் குத்துவிளக்கேற்றி கல்வி நிறுவனத்தை துவங்கி வைத்து பேசியதாவது,
சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகளை களைய கல்வி மட்டுமே ஒரே வழி என காமராஜர் கூறியுள்ளார். கல்வி நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. சுயநலத்தை ஒழித்து விட்டு அறிவை மக்களுக்காக பயன்படுத்துவதே கல்வியின் முக்கியத்துவமாகும்.
மனிதனுக்கு நல்ல இயல்புகளை கற்றுத் தருவது கல்வி ஒன்று தான். மாணவர்களை எப்போதும் அமைதியாய் இரு என ஆசிரியர்கள் கூறக் கூடாது. அவர்களது கேள்வி கேட்கும் திறனை தூண்ட வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளின் இரண்டாம் ஆசிரியர்களாக இருக்க வேண்டும். மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே கல்வியல்ல. நல்ல மனிதர்கள், நல்ல பணியாளர்கள், ஊழலற்றவர்கள் அரசு துறைக்கு வரவேண்டும்.
டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த ஆண்டு 15,000 பணியிடஙகள் நிரப்பப்படும். குரூப் 2 தேர்வு மூலம் 3,000 பணியிடங்களும், விஏஓ தேர்வு மூலம் 1,000 பணியிடங்களும் விரைவில் நிரப்ப உள்ளோம். 10,800 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஏற்கனவே அறிவித்துவி்ட்டோம். இதற்கு மட்டும் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இளைஞர்கள் நல்ல முறையில் இத்தேர்வில் பங்கேற்க வேண்டும். மனப்பாடம் செய்து தேர்வு எழுதக் கூடாது. புரிதல் மட்டுமே முக்கியம் என்றார்.












Click it and Unblock the Notifications