சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை: கலெக்டர் ஷோபனா அறிவிப்பு
கரூர்: சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த, பாரசீக வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் ஷோபனா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முதலாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பௌத்த, பாரசீக வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் முந்தைய கல்வியாண்டின் இறுதித் தேர்வில் (முதல் வகுப்பைத் தவிர ) 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பிற்பட்டோர் நலத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் உதவித் தொகை ஏதும் பெறக் கூடாது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மாணவ, மாணவிகள் தங்களது புதிய அல்லது புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அவ்வாறு மாணவ, மாணவிகளிடம் பெறப்படும் விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்குரிய சான்றுகளை இணைத்து, உரிய படிவத்தில் பதிவு செய்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 25ம் தேதி ஆகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.