இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் தகுதி எனக்கு மட்டுமே உள்ளது- டோணி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி. கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை உட்பட சர்வதேச அளவில் இந்திய அணிக்கு பல கோப்பைகளை பெற்று தந்தவர். கூல் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் டோணியின் சாதனைகளை பாராட்டி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் 5 தொடரை முடித்து அடுத்த மாதம் வரை எந்த போட்டியும் இல்லாததால், இந்திய எல்லை பகுதிகளை பார்வையிட கிளம்பினார் டோணி. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நாட்டின் எல்லை பகுதிகளை பார்வையிட்ட டோணி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ராணுவத்தில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.
ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதிகளை டோணி சுற்றி பார்த்தார். அதன்பிறகு பத்திரிக்கைகளின் கேள்விகளுக்கு பதிலளித்த டோணி, இந்திய கேப்டனாக இருக்க தனக்கு மட்டுமே தகுதி இருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய அணியின் கேப்டனாக இருக்க யாருக்கு தகுதி உள்ளது என்று என்னிடம் கேட்டால், எனக்கு மட்டுமே தகுதி இருப்பதாக தான் நான் கூறுவேன். ஆனால் மற்றவர்களின் எண்ணம் வைத்து பார்த்தால் ஷேவாக், கம்பிர், விராத் கோஹ்லி போன்ற வீரர்களுக்கு கேப்டனாக இருக்கும் தகுதி உள்ளதாக தெரியும்.
சச்சினுக்கு ராஜ்யசபா புதிய இடமாக தெரியலாம். ஆனால் அங்கு சச்சின் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று நம்புகிறேன். எம்.பியாக பொறுப்பேற்றுள்ள சச்சினுக்கு எனது மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கிரிக்கெட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சச்சின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்றார்.
அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் துணை கேப்டனாக நீண்ட நாட்கள் பதவி வகித்த ஷேவாக் திடீரென நீக்கப்பட்டு கெளதம் கம்பிர் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆசிய கோப்பையின் போது, கம்பிரிடம் இருந்த துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, விராத் கோஹ்லிக்கு அளிக்கப்பட்டது. இதனால் டோணிக்கு பிறகு இந்திய அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற குழப்பம் நீடிக்கிறது.