வருமான வரித்துறையைத் தொடர்ந்து சேவை வரித்துறையும் ராம்தேவ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ்
கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடி வரும் பாபா ராம்தேவ் ஹரித்வாரில் பாதாஞ்சலி யோகா பீடம் உட்பட 3 அறக்கட்டளைகளையு நடத்தி வருகிறார். ஏற்கெனவே ரூ.58 கோடி வருமான வரி தொடர்பாக பாதாஞ்சலி யோகா அறக்கட்டளைக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது. இந்நிலையில் சேவை வரித்துறையின் சார்பிலும் ராம்தேவின் அறக்கட்டளைக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
பாபா ராம்தேவ் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார். இந்த முகாம்களில் பல்லாயிரக்கணக்கான பேர் கலந்துகொள்கிறார்கள். அப்படி கலந்துகொள்பவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக வெவ்வேறு கட்டணம் மதிப்புள்ள கூப்பன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த கூப்பன்களை வாங்கி முகாம்களில் கலந்துகொள்கிறார்கள். குளிர்சாதன வசதி கொண்ட பயிற்சி முகாம்களில் கலந்துகொள்வதற்கான கூப்பன்களின் மதிப்பு பல்லாயிரக்கணக்கான ரூபாய் ஆகும்.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் ராம்தேவ், நாடு முழுவதும் இதுவரை நடத்தியுள்ள யோகா பயிற்சி முகாம்கள் தொடர்பான கணக்குகளை மத்திய உற்பத்தி வரி புலனாய்வு பிரிவு இயக்குனரகம் ஆய்வு செய்து வருகிறது.
சுகாதாரம், உடற்பயிற்சி அளித்தல் ஆகியவை போன்று யோகா பயிற்சியும் சேவை வரியின் கீழ் வருகிறது. எனவே யோகா பயிற்சி முகாம்களில் வசூலான தொகைக்கு ரூ.4 கோடியே 94 லட்சம் சேவை வரி பாக்கி வைத்திருப்பதாகவும், அந்த தொகையை செலுத்தாதது ஏன்? என்பது பற்றி விளக்கம் கேட்டும் ராம்தேவின் அறக்கட்டளைக்கு சேவை வரித்துறை நோட்டீசு அனுப்பி இருக்கிறது.