எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தேர்வில் தோல்வி அடைந்த 5 மாணவிகள் தற்கொலை செய்ய முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 86.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். போடி நாயக்கனூர் சண்முக சுந்தரபுரத்தைச் சேர்ந்த முனுசாமி மகள் விஜி பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் வரும் என்று எதிர்பார்ததிருந்தார். ஆனால் அவர் 500க்கு 303 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்ததால் மணமுடைந்தார். இதையடுத்து அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு மயங்கினார். உடனே அவரை போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்நிலையில் மதுரையை அடுத்துள்ள சமயநல்லூரைச் சேர்ந்த சவுந்தர்யா, ஊமச்சிகுளத்தை சேர்ந்த பிரபாதேவி, வைரவ நத்தத்தை சேர்ந்த வளர்மதி, சோழவந்தான் முதலியார் பேட்டையைச் சேர்ந்த ஜெய மீனாட்சி, பூவந்தியைச் சேர்ந்த ப்ரியா ஆகிய 5 மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தனர். இதனால் மணமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றனர்.
இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே எங்கே தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் திருச்சி தீனதேவதானம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவன் தீக்குளித்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரவிந்த் பயந்தது போன்றே தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.