10ம் வகுப்பு தேர்வு: விருதுநகரின் 26 ஆண்டு கால சாதனை பறிபோனது
விருதுநகர்: 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தி்ல் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் 26 ஆண்டு தொடர் சாதனை பறிபோனது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து விருதுநகர் 1985ம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக்கப்பட்டது. அப்போது முதல் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வந்தது. கடந்த 26 ஆண்டுகளாக இந்த சாதனை தொடர்ந்தது. கடந்த மே 22ம் தேதி வெளியான பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து 27வது ஆண்டாக இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டது.
நேற்று முன்தினம் வெளியான 10ம் வகுப்பு தேர்விலும் இந்த சாதனையை விருதுநகர் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் வெற்றி இந்த முறை கிடைக்காமல் போய்விட்டது. ஈரோடு மாவட்டம் 95.48 தேர்ச்சி சதவிகிதத்துடன் முதலிடத்தை பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் 93.68 தேர்ச்சி சதவிகிதத்துடன் 2வது இடத்தையும், 93.53 தேர்ச்சி சதவிகிதத்துடன் விருதுநகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதனால் விருதுநகர் மாவட்டத்தின் 26 ஆண்டு கால தொடர் சாதனை இந்த ஆண்டு முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.