அர்ஜூனா விருது குறித்து பிசிசிஐக்கு ஏற்கனவே தெரிவித்து இருந்தோம்- விளையாட்டு துறை
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுத்தோறும் அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. இதற்காக பல விளையாட்டு வாரியங்களிடம் இருந்து வரும் பரிந்துரைகளை, மத்திய விளையாட்டு துறையின் தேர்வுக் குழு பரிசீலித்து, சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம்.
கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சாம்பியன்களாக ஜொலித்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவருக்கு இந்த ஆண்டு அர்ஜூனா விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லிக்கு, அர்ஜூனா விருது பெற பரிந்துரைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அர்ஜூனா விருது பெற விளையாட்டு வாரியங்கள் பரிந்துரைகளை அனுப்பும் கடைசி தேதி முடிந்த நிலையில், பிசிசிஐயிடம் இருந்து பரிந்துரை கடிதம் வராதது தெரிய வந்தது. இது குறித்து பிசிசிஐ நிர்வாகிகளிடம் கேட்ட போது, தங்களுக்கு அர்ஜூனா விருது குறித்து விளையாட்டு துறையினரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் பிசிசிஐயின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய விளையாட்டுத் துறை இணை செயலாளர் ராகுல் பட்நகர், அர்ஜூனா விருது பெற தகுதி உள்ள வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு பிசிசிஐக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
மாநில அரசுகள் மற்றும் பிசிசிஐ உட்பட அனைத்து விளையாட்டு வாரியங்களுக்கும், கடந்த ஜனவரி 28ம் தேதியே விருது குறித்த அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அர்ஜூனா, கேல் ரத்னா, திரோனாசரியா, தயன்சந்த் உட்பட முக்கிய விருதுகளை பெற தகுதி உள்ள வீரர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மத்திய விளையாட்டு துறையின் இணையதளத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆண்டுத்தோறும் பின்பற்றும் அதே முறை தான் இந்த ஆண்டும் பின்பற்றப்பட்டது. இது குறித்து மற்ற அனைத்து விளையாட்டு வாரியங்களுக்கும் தெரியும்.
விருதுகளுக்கு பரிந்துரை செய்ய கடைசி நாள் ஏப்ரல் 30ம் தேதி என்ற தகவலை ஏப்ரல் கடைசி வாரத்தில் பிசிசிஐ உட்பட அனைத்து விளையாட்டு வாரியங்களுக்கும் நினைப்படுத்தப்பட்டது.
இது குறித்து மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பரிந்துரை கடிதமும் வரவில்லை. ஆனால் மற்ற விளையாட்டு வாரியங்களிடம் இருந்து அதிகளவில் பரிந்துரை கடிதங்கள் வந்துள்ளன என்றார்.