உச்சநீதிமன்றம் அனுமதித்தால் இரண்டே ஆண்டில் புதிய அணை - கேரள அமைச்சர்
கொச்சி: உச்சநீதிமன்றம் அனுமதித்தால் இரண்டே ஆண்டில் முல்லைப் பெரியாறில் புதிய அணையை கேரளாவில் கட்ட முடியும் என்று அம்மாநில அமைச்சர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் கேரள பாதுகாப்பு அமைப்பின் சார்பில் முல்லை பெரியாறு அணை பற்றிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கேரள பாசனத்துறை அமைச்சர் ஜோசப், முன்னாள் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜோசப் பேசுகையில், "உச்சநீதிமன்ற உயர்நிலை குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமாக இருக்கிறது. முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவே உயர்நிலை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அதனால் இதன் அறிக்கையை உச்சநீதிமன்றம் முழுமையாக பரீசிலிக்க வேண்டியது அவசியம் இல்லை. அந்த அறிக்கையை எதிர்க்க நமக்கு உரிமை உள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஜூலை 23-ந் தேதி விளக்கம் அளிக்கும்படி தமிழக, கேரள மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கேரள அரசு விளக்கம் அளிக்கும். கேரள தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலிக்காமல் ஒருதலைபட்சமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை ஏற்கமுடியாது.
ஒரு புதிய அணை கட்ட குறைந்தது 10 ஆண்டுகாலம் ஆகும் என்கிறது வல்லுநர் குழு. உச்சநீதிமன்றம் அனுமதித்தால் எங்களால் இரண்டே ஆண்டில் புதிய அணையை கட்ட முடியும் என உறுதியாகக் கூறுகிறோம்," என்றார்.