டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டை தவிர்க்க கம்ப்யூட்டர் பில் அறிமுகம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள வந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் டாஸ்மாக் மண்டல மேலாளர் பிச்சையா தலைமையில் சேரன்மகாதேவி மற்றும் அம்பை பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படையினரும், சங்கரன்கோவில் பகுதி டாஸ்மாக் கடைகளில் மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் குழுவினரும் சோதனை நடத்தினர். அப்போது சில டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தும்போதே டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். முறைகேடுகளில் ஈடுபட்ட 20 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உளளது. மேலும் சென்னையில் இன்று டாஸ்மாக் மாநில நிர்வாக இயக்குனர் தலைமையில் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களின் கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரியும் வண்ணம் விலைப்பட்டியல் வைப்பதுடன் கம்ப்யூட்டர் மூலம் பில் வழங்கும் முறையை அமல்படுத்துவது உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.