சுரங்க ஊழல் வழக்கில் எதியூரப்பாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: எந்த நேரத்திலும் கைது?
கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது கடந்த மாதம் 15ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை முதல் குற்றவாளியாக சேர்த்தனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பெங்களூர், ஷிமோகா ஆகிய இடங்களில் உள்ள எதியூரப்பாவின் வீடுகள், அவரது மகன்கள் விஜயேந்திரா, ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள், மருமகன் ஆர். சோஹன் குமாரின் வீடு, மகனின் கம்பெனி, சுரங்க உரிமம் பெற எதியூரப்பா குடும்பத்திற்கு ரூ.20 கோடி கொடுத்த பெல்லாரியில் உள்ள சவுத் வெஸ்ட் மைனிங் கம்பெனி என மொத்தம் 8 இடங்களில் கடந்த மாதம் 16ம் தேதி காலை 6.15 மணி முதல் மாலை 4 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர்.
இதையடுத்து எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் சோஹன் குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஆர். வெங்கட் சுதர்ஷன் தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் இன்று தீர்ப்பை அறிவித்த அவர் எதியூரப்பா, அவரது மகன்கள் மற்றும் மருமகனின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாகத் தெரிவித்தார்.
இதனால் எதியூரப்பா எந்நேரமும் கைதாகலாம் என்ற சூழல் நிலவுகிறது.